சர்வதேச தடைகள் மற்றும் கொவிட் தொற்று நோயால் எல்லைகள் மூடப்பட்டுள்ளமை போன்ற காரணங்களால் வட கொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்நாட்டில் உள்ள ஐ.நா. அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
குறிப்பாக சிறுவர்கள் மற்றும் முதியோர் கடும் பட்டினியால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனர்.
உணவு பஞ்சத்தால் வட கொரியா மக்கள் மரியாதையுடன் வாழும் ஒரு வாழ்க்கையை இழந்து வருகின்றனர் என ஐ.நா. அதிகாரி குவாண்டானா சுட்டிக்காட்டியுள்ளார்.
வட கொரியாவின் அணு ஆயுத சோதனைகளை மேற்கொண்டதால் அந்நாட்டின் மீது பல நாடுகள் தடைகளை விதித்துள்ளன. இந்நிலையில் நெருக்கடியைத் தீா்க்கும் வகையில் தடைகளை நீக்க வேண்டும் எனவும் அந்த அதிகாரி வலியுறுத்தினார்.
கொரோனா தொற்றிலிருந்து தப்ப சீனாவுடனான எல்லையை வடகொரியா மூடியதால் அந்நாட்டுடனான வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உணவு, பூச்சிக் கொல்லி மற்றும் எரிபொருளுக்காக சீனாவையே வட கொரியா நம்பியுள்ளது.
இதேவேளை, நாடு மிக மோசமான நிலையை எதிர்கொண்டுவருவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்ததாக அந்நாட்டு அரச ஊடகங்கள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டன.
நிலைமை மோசமடைவதைத் தவிர்க்க வட கொரியா மீது சர்வதேச நாடுகள் விதித்திருக்கும் தடையை தளர்த்துவதற்கு ஐ.நா. பாதுகாப்புச் சபை வழிசெய்ய வேண்டும். அங்கு உடனடி உயிர்காக்கும் உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஐ.நா. அதிகாரி குவாண்டானா தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் வட கொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அமெரிக்கா தெரிவித்து வருகிறது. அந்நாடு மீதான பொருளாதாரத் தடைகளை நீக்க முன்னர் அணு ஆயுதங்களை கைவிட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த நிபந்தனையை ஏற்க வட கொரியா மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.